குகை நமசிவாயர் ஜீவசமாதி, திருவண்ணாமலை
தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருப்பருப்பதம் என்னும் மல்லிகார்ஜுனத்தில் (ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம்) அவதரித்தவர் நமசிவாயர். இவரது தாய்மொழி கன்னடம். லிங்காயத்து எனப்படும் பரம்பரையைச் சேர்ந்தவர். இந்த மரபில் வந்தவர்கள் தீவிர சைவர்கள். ஆண், பெண் என்று இப்பிரிவில் உள்ள அனைவரும் கழுத்தில் சைவ சின்னமான லிங்கத்தை அணிந்திருப்பார்கள். கழுத்தில் இருக்கும் லிங்கத்துக்கே முதல் வழிபாடு நடத்துவார்கள். இளம்வயதில் இருந்தே சிவபக்தியில் திளைத்தார். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார். ஒருநாள் கனவில் தோன்றிய சிவபெருமான், நமசிவாயா! தென்திசை நோக்கிப் புறப்பட்டு என்னிடம் வா! என்று கட்டளையிட்டார். தன் சீடர்கள் முந்நூறு பேருடன் அவர் புறப்பட்டார். விரூபாட்சித்தேவர் என்பவர் தலைமைச் சீடராக இருந்தார். வரும் வழியில் ஈசன் தன் திருவிளையாடலைத் தொடங்கினார்.






